Tuesday, November 28, 2006

வாங்கி கட்டிக்கொள்வது எப்படி?

என்னதான் லக்கி இந்த 'எப்படி' வகையான பதிவுகளை நிறுத்த சொன்னாலும். நம்மோட மனநிலை 'அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்' தான். ஆனால், இது சமையல் குறிப்பு பதிவல்ல. 'செமை'யாக வாங்கி கட்டி கொண்டிருக்கும் நம்ம சாப்பல் பற்றியது.

இந்திய அணி மூன்றாவது போட்டியில் வழக்கம்போல் மானங்கெட்டு தோற்றதை அனேகமாக எல்லாரும் மறந்திருக்கலாம் (அதானெ நம்ம மக்களின் அரிய குணம்). அந்த போட்டி முடிந்த பிறகு நடந்த ஊடக கூட்டத்தில் பதிலளிக்கையில்

'எம்.பிக்களின் கருத்து எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. அவ்வாறு பேசுவதற்கே
அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது' என்று கூறினார்.

இவர் மேல் ஏற்கனவே வெறுத்து போயிருந்தவர்கள் இதை விடுவார்களா? உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்கள் நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தை. நாட்டு மக்களின் அன்றாட/நெடுங்கால பிரச்சனைகளை பேசி கலைய துப்பிள்ளாதவர்கள். உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கிண்டலடித்த சாப்பல் கண்டிப்பாக கண்டிக்கபட வேண்டியவர்தான். இவர் யார் இந்திய எம்.பிக்களை பற்றி பேச? இந்திய பாராளுமன்றத்தில் கிரிக்கெட் பற்றிய விவாதம் வரலாம் தான். கிரிக்கெட் துறையும் இந்திய அரசுக்கு உட்பட்டது தானே? அதனால் எம்.பிக்கள் கிரிக்கெட் பற்றி பேச உரிமை இருக்கிறது. ஆனால், சகிக்க முடியாதது என்னவெனில் இவர்களின் அக்கறை கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் இல்லை. ஹாக்கி துறை நாறி கிடக்கிறது. தடகளத்துறை, அய்யோ கேட்கவே வேண்டாம். அதை பற்றி பேசி தேசிய விளையாட்டான ஹாக்கியை, தேங்கி கிடக்கும் தடகளத்துறையை மேம்படுத்த இவர்களுக்கில்லாத அக்கறை கிரிக்கெட்டின் மீது மட்டும் ஏன்? கத்தை கத்தையாக பணம் புழங்குமிடம் என்பதாலா? உலகிலேயே பணக்கார விளையாட்டு வாரியம் நம் கிரிக்கெட் வாரியம் தான். நம் நாட்டு கிரிக்கெட்டிற்கு சாபம் என்றுதான் சொல்லவேண்டும், ஒரு பழுத்த அரசியல் வாதி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது. கிரிக்கெட் விளையாடாமல் அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இந்நிலையில் நேற்று பல தரப்புகளின் கண்டனத்திற்கு ஆளானார் சாப்பல். எம்.பிக்கள் சாப்பலை கண்டித்ததோடு அவரை எச்சரிக்கையாக பேசும்படியும் கூறினர். பி.ஜே.பியின் நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறுகையில்,
'இந்திய அணியின் தொடர் தோல்விகளை நிறுத்த சரத் பவார் விரைவில நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்று கூறினார்.
'இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கு சாப்பல் தான்
காரணம். அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்' என்று குடியரசு கட்சியின் எம்.பி
ராம்தாஸ் த்வாலே கூறினார்.
இதோடில்லாமல் கம்யூனிஸ்டுகள் (ஏற்கனவே கங்குலி
சர்ச்சையில் சாப்பல் மேல் கடுப்பாக இருப்பவர்கள்) சாப்பலை கார சாரமா திட்டி
தீர்த்தனர்.


மேலும், கட்சி பாகுபாடில்லாமல் (இந்த ஒரு விஷயத்திலாவது ஒன்று சேர்ந்தார்களே) அனைத்து கட்சியினரும் இது குறித்துன் கண்டனம் தெரிவித்ததோடு இந்திய அணியின் தோல்வி குறித்து கவலை தெரிவித்தனர்.

இது மட்டுமில்லாமல் முகம்மது கைஃபின் வீட்டின் மீது கல்லெறியும் நடத்தியுள்ளனர் ஒரு கூட்டத்தினர். நேற்று சாலை முழுவதும் சாப்பல் எரிக்கப்பட்டார் (பொம்மைதான்). இந்திய அணியினர் செருப்படி வாங்கினர். (இதையெல்லாம் சத்தியமா நான் எதிர்பார்த்தேன்). இந்திய ரசிகர்களின் இந்த செயல் ஒரு தோல்வியின் பின் விளைவல்ல ஒரு ஆண்டில் இந்திய சந்தித்து தொடர் தோல்விகளின் விளைவாக எனக்கு தெரிகிறது. எதுவாயினும் இச்செயல் பண்பாடற்றது. இதற்கிடையில், சிலர் சந்துல சிந்து பாடுவது கங்குலி புகழ் பாடினர். 'சவுரவ் ஹமாரா கவுரவ்', 'கங்குலி தி ப்ரைட் ஆஃப் இந்தியா' என்றும் எழுதி காண்பித்து தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டனர்.

முடிவாக, சாப்பல் எம்.பிக்களை விமர்சித்தது தேவையற்றது. கிரிக்கெட்டின் மீது மட்டும் இந்தளவு அக்கறை காட்டும் அரசியல்வாதிகளும் என் கண்டனத்திற்குரியவர்கள். இந்திய அணியின் மானங்கெட்ட தோல்விகளுக்கு காரணமான அரசியல், முறையற்ற தேர்வு முறை, செத்த ஆடுகளங்கள், வெறியில்லாத சூடு சுரணையற்ற வீரர்கள் மற்றும் அணியின் ஒற்றுமையை குலைத்து வரும் பயிர்ச்சியாளர் இவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

ஜான் ரைட்டின் நான்காண்டுகளில் இல்லாத/வெளிவராத பிரச்சனைகள், தோல்விகள் சாப்பலின் இந்த இரண்டாண்டுகளில். இப்படியே போனால்.......??????

11 comments:

Anonymous said...

நீங்க உங்க வேலையை பாருங்க லொடுக்கு.

said...

முயற்சி செய்கிறேன் அனானி.

said...

Don't lose heart. We will win today :)))

//உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கிண்டலடித்த சாப்பல் கண்டிப்பாக கண்டிக்கபட வேண்டியவர்தான். இவர் யார் இந்திய எம்.பிக்களை பற்றி பேச?
//
If the MPs have the right to pass disparaging remarks on Chappel, he has every right to retaliate ! That is my opinion. MPs are required to have decent amount of TOLERANCE :-(

said...

//enRenRum-anbudan.BALA சொன்னது...…

Don't lose heart. We will win today :)))

//
அந்த நம்பிக்கையில் தான் நாமெல்லாம் இன்னும் கிரிக்கெட்டை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

//If the MPs have the right to pass disparaging remarks on Chappel, he has every right to retaliate ! That is my opinion. MPs are required to have decent amount of TOLERANCE :-(//
நான் சொல்ல வந்தது அப்படியில்லை. கிரிக்கெட் வாரியம் என்பதும் அதன் உறுப்பினர்களும் இந்திய அரசுக்குட்பட்டதென்றால் அதைப் பற்றி விமர்சிக்க பாராளுமன்றத்திற்கு இல்லையா? கிரிக்கெட் வாரியம் தனியார் உடமையென்றால், யாரிந்த எம்.பிக்கள் அதைப் பற்றி விமர்சிக்க என்று கேட்கலாம். நான் சொல்வது சரியா எ.அ.பாலா?

said...

//வாங்கி கட்டிக்கொள்வது எப்படி?//

இந்திய அணியில சேரணுமா?

said...

ஆஹா!

நீங்களும் நம்மளை மாதிரி கிரிக்கெட் பிரியரா (வெறியரா), சந்தோசம்.

எனக்கு நம்ம எம்.பிகள் எம்பி எம்பி குதித்து பேட்டி கொடுத்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருது.

இவங்களை எல்லாம் மண்டை காப்பாளன் இல்லாமல் மைதானத்தில் நிறுத்தி பிரட் லீயை பந்து வீச சொல்லி நடுமண்டையை பிளக்கணும் போல் ஆசையாக இருக்குது, பின்ன என்னங்க, மக்கள் பிரச்சனையை பேசுவதை விட்டு விட்டு, வீணா போனவங்க.

இதுக்கு முன்னாடி என்னமோ ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா சென்ற அணிகள் எல்லாம் வெற்றிகளை மட்டுமே குவித்து வந்தது போலவும், இந்த முறை தான் தோற்பது போலவும் தோற்றம் உருவாக்குறாங்க.

இப்போ நம்ம அணி இருக்கும் நிலையில் சென்ற முறை உதை வாங்கிய அதே இலங்கை நம்ம ஊரிலேயே நம்ம அணியை தூக்கி போட்டு சாத்திட்டு போயிடுவாங்க, அந்த நிலைமையில் நம்ம அணி வீரர்களின் தற்போதைய திறமை இருக்குது. இதுக்கு யாரை குறை சொல்வது, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி தோற்றால் பழி போட சாப்பல் கிடைச்சிட்டுட்டார்.

அப்புறம், இந்திய அணியை சரி செய்ய நிறையவே செய்யணும், அப்படி செய்ய கிரிக்கெட் போர்ட் தயார் இல்லை.

முதலில் பழைய சாதனைகளை சொல்லி ஒட்டிக் கொண்டிருக்கும் வீரர்களையும், கொடுத்த வாய்ப்பை போராடாமல் வீணாக்கும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பனும்.

இப்போ கூட பாருங்க, லாயக்கு இல்லைன்னு சொன்ன லட்சுமணனை அனுப்பி இருக்காங்க, அதுக்கு பதிலாக நன்றாக ஆடும் இளம் வீரர் டெல்லி தவானை அனுப்பி இருக்கலாம் தானே.

said...

//தம்பி சொன்னது...…

//வாங்கி கட்டிக்கொள்வது எப்படி?//

இந்திய அணியில சேரணுமா?

//
வாங்க தம்பி, பார்த்து ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம்.

கரெக்டா சொன்னீக போங்க. :)

said...

//பரஞ்சோதி சொன்னது...…

ஆஹா!

நீங்களும் நம்மளை மாதிரி கிரிக்கெட் பிரியரா (வெறியரா), சந்தோசம்.

//
வாங்க பரஞ்சோதி,
இப்போதக்கு இதுல சந்தோஷம் ஒன்னும் இல்லங்க. வெறும் தோஷம் மட்டும் தான்.

//எனக்கு நம்ம எம்.பிகள் எம்பி எம்பி குதித்து பேட்டி கொடுத்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருது.

இவங்களை எல்லாம் மண்டை காப்பாளன் இல்லாமல் மைதானத்தில் நிறுத்தி பிரட் லீயை பந்து வீச சொல்லி நடுமண்டையை பிளக்கணும் போல் ஆசையாக இருக்குது, பின்ன என்னங்க, மக்கள் பிரச்சனையை பேசுவதை விட்டு விட்டு, வீணா போனவங்க.
//
ப்ரட் லீக்கு விலை பேசுவதாக கேள்விபட்டேன்.

//இதுக்கு முன்னாடி என்னமோ ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா சென்ற அணிகள் எல்லாம் வெற்றிகளை மட்டுமே குவித்து வந்தது போலவும், இந்த முறை தான் தோற்பது போலவும் தோற்றம் உருவாக்குறாங்க. //
அப்போ எல்லாம் இந்த மாதிரி தொடர் தோல்விக்கு பிறகு அங்கே போகலங்க. இப்போ அப்படியில்லை. ஒரு வருஷமா தொடர்ந்து தோற்பதால் தான் இந்த விளைவுனு நினைக்கிறேன்.

//இப்போ நம்ம அணி இருக்கும் நிலையில் சென்ற முறை உதை வாங்கிய அதே இலங்கை நம்ம ஊரிலேயே நம்ம அணியை தூக்கி போட்டு சாத்திட்டு போயிடுவாங்க, அந்த நிலைமையில் நம்ம அணி வீரர்களின் தற்போதைய திறமை இருக்குது.//

தயவு செய்து இலங்கை அணியை கேவலப்படுத்துவதை உடனே நிறுத்தவும். உங்களுக்காகத் தான் கென்யா, பங்கால் அணிகள் உள்ளன.

//இதுக்கு யாரை குறை சொல்வது, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி தோற்றால் பழி போட சாப்பல் கிடைச்சிட்டுட்டார்.
//
அவருக்கும் பங்குண்டு என்பது எனது எண்ணம்.

//அப்புறம், இந்திய அணியை சரி செய்ய நிறையவே செய்யணும், அப்படி செய்ய கிரிக்கெட் போர்ட் தயார் இல்லை.

முதலில் பழைய சாதனைகளை சொல்லி ஒட்டிக் கொண்டிருக்கும் வீரர்களையும், கொடுத்த வாய்ப்பை போராடாமல் வீணாக்கும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பனும்.

இப்போ கூட பாருங்க, லாயக்கு இல்லைன்னு சொன்ன லட்சுமணனை அனுப்பி இருக்காங்க, அதுக்கு பதிலாக நன்றாக ஆடும் இளம் வீரர் டெல்லி தவானை அனுப்பி இருக்கலாம் தானே.
//

ஒன்னே ஒன்னு செஞ்சா போதும். அரசியல் இல்லாத வாரியம் வேணும். சாத்தியமா?

உங்கள் நீண்ட கருத்திற்கு நன்றி பரஞ்சோதி.

said...

ஜிம்பாப்வே, கென்யா, பங்களாதேஷ், UAE அணிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாட போட்டி போட்டுக் கொண்டு விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம்!

said...

//ஆவி அண்ணாச்சி சொன்னது...…

ஜிம்பாப்வே, கென்யா, பங்களாதேஷ், UAE அணிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாட போட்டி போட்டுக் கொண்டு விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம்!
//

அதானே பாத்தேன். எங்கேடா ஆளை காணோம்னு.

இந்த அணிகள் கூட அமெரிக்காவையும் சேத்துக்குங்க. பாரளுமன்றத்துல 'தாராளமய' மன்மோகன் அமெரிக்காவுக்கும் அழைப்பு கொடுத்திருப்பதாக கேள்வி. அதெல்லாம் இருக்கட்டும், அதுலயாவது நாம ஜெயிப்போமா??

said...

நிறைவேறுமா லொடுக்குப் பாண்டியின் நப்பாசை?